Sunday, February 11, 2007

உன் நினைவில்...

அன்பில் இணைந்த கணம்
அறிய இயலவில்லை

இயல்பாய் நிகழ்ந்ததா
இன்பத் தமிழால் இணைந்ததா
இனிய பண்பால் விளைந்ததா
இணைவில் பிறந்ததா

வந்த வழி தெரியவில்லை
போகும் பாதை புலப்படவில்லை

தேடித்தொலைந்த கணம்
பொய்மானோ
பொன்மழுவோ
கானல்நீரோ
காட்சிப் பிழையோ
நிஜத்தின் நிழலோ
நிழலின் இருப்போ
கனிந்த கனவோ
கனவின் உருவோ

கேள்விகள்
பிறக்கையிலேயே மரிக்கும்

மதியின் மயக்கமோ
மயக்கும் மதியோ
பழிக்கும் விதியோ
விதியின் சதியோ

புரியாத வாழ்க்கையின்
புதிரை விலக்காது
ஏற்றுக்கொண்ட கணம்

எங்கும் சூழ்ந்ததமைதி
பிறந்தது பேரின்ப கானம்

வலியைப் போக்கும்
மாமருந்தாய் நீ
பேரன்புச் சுனையாய்
பேரின்ப நதியாய்

உன் நினைவில் என்றும்
நான் வாழ்ந்திருப்பேன்
உயிர் கசிந்திட
நன்னீர் ஆற்றிலுறையும்
தெள்ளிய நீர்ச்சுவையாய்

0 Comments:

Post a Comment

<< Home